இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்?
நாட்டின் மூத்த குடிமகனான ஜனாதிபதி(குடியரசு தலைவர்) தேர்தல் தற்போது சூடு பிடித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டிலின் பதவிக்காலம் அடுத்த மாதம்(யூலை) 24ம் திகதியுடன் நிறைவடையும் இந்நிலையில் நாட்டிற்கு அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு அதற்கான வேட்பாளர்கள் தெரிவில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன.
அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு களமிறங்கியுள்ள அரசியல் கட்சிகள்:
ஐக்கிய முற்போக்குக்கூட்டணி(காங்கிரஸ்) தேசிய ஜனநாயகக்கூட்டணி(பாஜக) இடது சாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், அதிமுக, சமாஜ்வாடி, சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் போன்றவை. இவைகளில் காங்கிரசு, பாஜக இருபெரும் கட்சிகளும் ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பெரும்பான்மை வகிக்கின்றன.
ஜனாதிபதியை தெரிவு செய்வது எப்படி?
மேற்கண்ட பிரதான அரசியல் கட்சிகளான இவைகள், தங்களுடைய எம்.பி(லோக்சபா,ராஜ்யசபா) எம்.எல்.ஏ(சட்டமன்ற உறுப்பினர்)க்களை கொண்டே ஜனாதிபதியை தெரிவு செய்யும். அதாவது ஜனாதிபதி தெரிவு இவர்களின் வாக்கு எண்ணிக்கையில் அமைந்துள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளுக்கு தனித்தனி மதிப்பீடு உள்ளது.
ஒரு உதாரணத்திற்கு தமிழ்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 6 கோடி, இதை தமிழ்நாட்டின் மொத்த சட்டமன்ற தொகுதியால் வகுக்க வேண்டும். வகுத்த விடையை 1000(ஆயிரம்)த்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பே ஒரு எம்.எல்.ஏவின் மதிப்பாகும் அல்லது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.
எ.கா. 6,00,0000 / 234 = 25641.025 / 1000 = 25.641.
இதுபோல் எம்.பி.க்களின் வாக்குகளுக்கும் தனிமதிப்பு உள்ளது. அதாவது ஏற்கனவே வகுத்து வந்த மதிப்பை மொத்த தொகுதிகளால் பெருக்கி அதில் கிடைக்கும் விடையை மாநிலத்தின் மொத்த எம்.பிக்களால்(மாநிலங்களவை+மக்களவை) வகுக்க வேண்டும்.
எ.கா. 25.641 * 234 = 6000 / 21(mp) = 285.7142.
இதுவே ஒரு எம்.பியின் மதிப்பாகும். இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திற்கு எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வாக்குகள் கணக்கெடுக்கப்படும்.
நம்நாட்டில் எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882. இதில் யார் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர். எம்.பி.க்கள் டெல்லி நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் மாநில தலைமை செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வேண்டும்.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கும் போது 2 முறை வாக்களிக்கலாம். இதில் ஒருவருக்கு முதல் வாக்கும், மற்றொருவருக்கு 2வது வாக்கும் போட வேண்டும். வாக்குச் சீட்டு முறையில் இது நடைபெறும். அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். முதல் சுற்றில் 50 சதவீதத்துக்கு மேல் ஒரு வேட்பாளர் வாக்கு பெறாவிட்டால் 2வது சுற்று வாக்குகள் எண்ணப்படும். முடிவில் அதிக வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதி ஆவார்.
தற்போதைய நிலை
இந்நிலையில் நம்நாட்டைப் பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி (காங்கிரஸ்) தேசிய ஜனாநாயக கூட்டணி(பாஜக) இவை இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவை தவிர இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணிகளான திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, பிஜு ஜனதா தளம் போன்றவையும் கூட்டணிக்கு வெளியில் உள்ள சமாஜ்வாடி, அதிமுக போன்றவையும் ஆதரவு தெரிவிப்பதைப் பொறுத்தே ஜனாதிபதி யார் என்று முடிவு செய்ய முடியும்.
தற்போது ஆளும் ஐமுகூட்டணி பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது. அதன் தலைவர் அன்னை சோனியா காந்தி பிரணாப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு தனது கூட்டணியான திரிணாமூல் காங்கிரஸை நாடினார்.
அதற்காக திரிணாமூல் தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் மம்தா பிரணாப்பை ஆதரிக்க வில்லை. மேலும் மம்தாவும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவும் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அது… முன்னாள் ஜனாதிபதி அணு விஞ்ஞானி அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தும் படி அறிவித்தனர்.
அல்லது பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இவர்கள் இருவரில் யாராவது ஒருவரை நிறுத்தப்படி அறிவித்தனர். ஆனால் இதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வில்லை. அமைதிப்பூங்கா மன்மோகன்சிங் பிரதமராகவே நீடிப்பார் என்றும் பிரணாப் முகர்ஜிக்கு பதிலாக வேறு வேட்பாளரை நிறுத்தலாம் எனவும் யோசித்துக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே தேசிய ஜனநாயகக்கூட்டணி தனது வேட்பாளரை அறிவிக்க வில்லை. காரணம், ஐமுகூ அறிவித்த பின்னரே தாம் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. அதன் தலைவர் எல்.கே அத்வானி அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டார். ஜெ..வும் இதற்கு பரிபூரண சம்மதம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜெயலலிதா ஆதரித்த முன்னாள் சபாநாயகர் சங்கமா குறித்த பாஜக நீண்ட நாட்கள் கருத்து வெளியிடாமல் இருந்தது.
இதுகுறித்து பாஜக தலைவர்கள் நடத்திய மாநாட்டில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் இறுதியில் ஐமுகூவை எதிர்த்து நாட்டின் பிரதான கட்சியான தே.ஜ.கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தினால்தான் தங்களுக்கு மரியாதை என்ற நிலை உருவாக பி.ஏ.சங்மாவை தனது வேட்பாளராக அறிவித்தது.
பி.ஏ.சங்மா, ஐ.மூ.கூட்டணியான தேசியவாத காங்கிரசில் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்டார். இதை அக்கட்சி விரும்பவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுமாறு சங்மாவை வலியுறுத்த அதிரடியாக அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்பே, தேசிய ஜனநாயக கட்சி சங்மாவை வேட்பாளராக அறிவித்தது. இதற்கிடையில் ஒரு முக்கிய நபரை மறந்துவிடக்கூடாது. அவர்… நாட்டின் ஏவுகணை ஹுரோ அப்துல் கலாம்.
ஏற்கனவே ஜனாதிபதியாக பதவி வகித்த இவரை மம்தா பானர்ஜி மறுபடியும் இவ்வருடத்திற்கான ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்குமாறு வேண்டினார். பேஸ்புக் மூலமாக ஆதரவும் திரட்டிய தருணத்தில் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக நிற்க தனக்கு விருப்பமில்லை என கலாம் அதிரடியாக அறிவித்ததன் மூலம் நாட்டு மக்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏமாற்றத்தை தந்துவிட்டார். தற்போது ஜனாதிபதி தேர்தல் போட்டியில் காங்கிரஸ்-பாஜக மோதுகின்றன.
காங்கிரசுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சங்மா, இத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி தேர்தல் என்பது குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்படுவது அல்ல எனவும், இது முக்கியமான போட்டி எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முழு ஆதரவையும் பெற்றுவிடவில்லை எனவும், இந்த தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுவதால் ஓட்டுக்களின் எண்ணிக்கை குறித்த கருத்து கணிப்பிற்கு இப்போது பேச்சே இல்லை எனவும், அதிக வாக்குக்களை பெறும் நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஒரு ஜனாதிபதி எந்த கட்சியையும் சாராமல் பொதுவான நபராக இருக்கவேண்டுமென்பதால் காங்கிரஸ் கட்சியை விட்டு (25.6.2012) பிரியா விடைபெற்றார் பிரணாப். இதற்கான காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோனி, அம்பிகா சோனி, பி.கே. ஹரிபிரசாத், பொதுச்செயலர் ராகுல் காந்தி, அகமது படேல், ஜனார்த்தன் துவிவேதி உட்பட 18 உறுப்பினர்களும் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட 12 நிரந்தர அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் பிரியாவிடை அளித்தனர்.
இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியது: பிரணாப் அனைவராலும் மதிக்கப்படும் நபர். ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதால் அமைச்சரவையில் இருந்து விலகும் அவரது வெற்றிடத்தை நாங்கள் எப்போதுமே உணருவோம் என்றார்.
சோனியா காந்தி புகழாரம்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவார். நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்பார் என நம்புகிறேன். காங்கிரஸ் வேட்பாளராக மட்டுமின்றி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளராகவும் பிரணாப் விளங்குகிறார்.
கூட்டணிக்கு வெளியிலும் அவருக்குக் கிடைக்கும் ஆதரவு பிரணாபின் தகுதி, நற்பண்புகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் ஆகும். அவருக்கு காங்கிரஸ் சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பிரணாப் முகர்ஜி: நான் எப்போதும் காங்கிரஸ்காரனாகவே இருந்திருக்கிறேன். என்னால் இயன்றதை இந்தக் கட்சிக்காகச் செய்துள்ளேன். அதற்கு மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்காக மறைந்த பாரதப் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக் பகுதிக்கு வந்த பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியது: மத்திய அமைச்சர் என்ற முறையில் நான் உங்களுடன் அதிகாரப்பூர்வமாகப் பேசுவது இதுவே கடைசியாக இருக்கும்.
இனி நான் உங்களுடன் அரசியல் பேச முடியாது. தனிப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்றார். இந்நிலையில் 26ம் திகதி மத்திய அமைச்சர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார் பிரணாப்.
வேட்பு மனுதாக்கல்
ஜனாதிபதி வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜியும் பி.ஏ.சங்மாவும் யூன்28ம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுத் தாக்கலின்போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் மற்றும் திமுக மூத்த உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தவிர இதர கட்சிகளின் பிரதிநிதிகள் வேட்புமனுத் தாக்கலின்போது ஆஜராகியிருந்தனர். பிரணாப் பேட்டி: வேட்பு மனுதாக்கல் செய்த பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரணாப், எனக்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்றார்.
இவரைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் பிரணாபை எதிர்த்துப் போட்டியிடும் பி.ஏ.சங்மாவும் (யூன்28ம் திகதி) பாஜக தலைவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். சூடுபிடிக்கும் தேர்தல் களம் வேட்பு மனு தாக்கல் செய்ததும் மறுநாளே சென்னை சென்ற பிரணாப், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு திரட்டினார். கருணாநிதி ஆதரவளிப்பதாக உறுதிபட தெரிவித்தார்.
சென்னையையடுத்து ஆந்திரா சென்றார் பிரணாப். அங்கு காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதற்கிடையில் பி.ஏ.சங்மாவும் தன் ஆதரவு கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றார். இந்த ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை பிரணாப்புக்கே அதிகம் வாய்ப்பிறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Last update: 2012-07-14 00:01:07