திருநெல்வேலி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் வன்னிகோனேந்தல் பஞ்சாயத்தைச் சேர்ந்தது அடைக்கலாபுரம் கிராமம்.
சங்கரன்கோவில்- நெல்லை பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு இந்தியா சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் பேருந்து வசதி இல்லாமல் இருந்தது.
தேர்தலுக்கு தேர்தல் கோரிக்கை வைத்தும் எந்த அரசும் இதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் இப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் செந்தூர் பாண்டியனிடம் இப்பகுதி மக்கள் சார்பில் யூனியன் சேர்மன் முருகையா பாண்டியன் பேருந்து வசதி கேட்டு மனு கொடுத்தார்.
அந்த மனுவை பரீசிலித்த அமைச்சர் உடனடியாக சங்கரன் கோவிலிலிருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக தேவர்குளம் செல்லும் அரசு பேருந்தை அடைக்கலாபுரம் வழியாக இயக்க நடவடிக்கை எடுத்தார்.
இதற்கான விழாவுக்கு தலைமை வகித்த யூனியன் சேர்மன் முருகையா பாண்டியன் கொடியசைத்து பேருந்தை இயக்கி வைத்தார்.
இத்தனை ஆண்டுகள் கழித்து முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்துக்கு கிராம மக்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். |