வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெங்களூரில் தாக்கப்படுவதாக வதந்தி வெளியானதையடுத்து அம்மாநகரத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இதையடுத்து வடகிழக்கு மாநிலத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்ப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர், மகராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மற்றும் அசாம் முதல்வர் தருண் கோஹாய் ஆகியோரிடம் போனில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின்னர் தமது இல்லத்தில் நடைபெற்ற ஊடகங்களின் சந்திப்பில் பிரதமர் கூறியதாவது: கர்நாடகாவில் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக பரவியுள்ள வதந்தி கவலை அளிக்கிறது.
வடகிழக்கு மாநிலத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் உணரும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
அசாம் கலவரத்தின் எதிரொலியாகவே வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாகவும் இதன் காரணமாக பெங்களூரை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. |