விசாரணைக்கு ஒத்துழைக்காத டுவிட்டர் இணையதளம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அசாமில் போடோ இனத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாதம் மோதல் வெடித்தது. இது பெரும் கலவரமாக மாறியது.
ஒரு வாரம் நீடித்த இந்த கலவரத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பெங்களூர், புனே, ஐதராபாத், சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற தொடங்கினர்.
இமெயில் மற்றும் செல்போனில் அவர்களுக்கு மிரட்டல் செய்தி வந்ததே இதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்திகள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டிருப்பதை உள்துறை அமைச்சகம் கண்டுபிடித்துள்ளது.
பேஸ்புக், யூ டியூப் போன்ற சமூக வலை தளங்கள் இதனை உறுதி செய்துள்ளன. ஆதாரங்கள் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் அரசு கூறியதை தொடர்ந்து ஆதாரங்கள் திரட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. யூ டியூப் மற்றும் பேஸ் புக் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக தொலை தொடர்பு துறை செயலாளர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது வரை 250க்கும் அதிகமான வலை தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
டுவிட்டர் வலை தளம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறது. டுவிட்டர் உள்பட விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அனைத்து வலை தளங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார். முதல் கட்ட விசாரணை அறிக்கை பாகிஸ்தான் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. |