மத்தியப் பிரதேச மாநில அரசின் அழைப்பை ஏற்று வரும் 21ம் திகதி சாஞ்சியில் நடைபெற உள்ள புத்த மத பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் ராஜபட்ச பங்கேற்க வருகின்றார்.
இதற்காக, 3 நாள் பயணமாக புதன்கிழமை இரவு டெல்லி வரும் ராஜபட்ச, வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார். அவருக்கு இரவு விருந்து அளிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, விடுதலைப்புலிகளுடனான போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களை அவரவர் பகுதிகளில் மறுகுடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.
மேலும், இலங்கையில் உள்ள இனப் பிரச்னைக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிராக இந்தியா வாக்களித்த பின்னர், ராஜபக்ச இந்தியாவிற்கு முதன்முறையாக விஜயம் செய்கிறார். |