இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஆட்சியைக் கேடயமாகப் பயன்படுத்தலாமே என்று வெள்ளிக்கிழமை ராமதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சனிக்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
ராமதாஸின் முக்கிய குறிக்கோளே திமுக ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான். கடைசிவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலே அமைச்சராக பதவிச் சுகம் அனுபவித்துவிட்டு, அந்தக் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டுப் போனவர் ராமதாஸ். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலே கூட்டணி என்று ஆசை வார்த்தை கூறி அந்தக் கட்சியை அதிமுகவின் பக்கம் இழுக்க படாதபாடுபட்டு அதற்காக ஜெயலலிதா மூலம் காங்கிரஸுக்கு அழைப்புவிடச் செய்தவர். ஆனால் காங்கிரஸின் உறுதியான நிலையால் ஏமாற்றம் அடைந்து தற்போது இலங்கைத் தமிழர்களுக்காக ஏன் ஆட்சியை இழக்கக் கூடாது என்கிறார்.
தமிழீழம் மலருமானால் மூன்றாவது முறையாகக் கூட பதவியை இழக்கத் தயார் என்று சட்டப் பேரவையிலேயே அறிவித்துள்ளேன். திமுக பதவி விலக வேண்டும் என்பதில் குறியாக உள்ள ராமதாஸ், இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு சரியில்லை என்று கூறி மத்திய அமைச்சராயிருந்த தனது மகன் அன்புமணியை ராஜிநாமா செய்யச் சொல்லியிருக்கலாமே.
இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளதாகக் குறிப்பிடும் வைகோவைத் தவிர வேறு எவரும் துரோகத்தைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியானவராக இருக்க முடியாது. ஏனெனில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்த கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு வெளியே சென்றவர் வைகோ. பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இதற்காக தூதரக நடைமுறைப்படி அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும், பிரபாகரன் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் உரிய விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வந்தார்.
பிரபாகரனைப் பிடித்து நாடுகடத்த முடியவில்லை எனில், இலங்கை அரசின் உதவியோடு இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை சிறைப்பிடிக்க மத்திய அரசை தமிழக சட்டப் பேரவை மூலம் கேட்டுக் கொண்டவர் ஜெயலலிதா. இலங்கைப் பிரச்னையில் இந்தியா ஓரளவிற்குத்தான் தலையிட முடியும் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா. இலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் தொலைபேசி மூலம் இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் பேசியுள்ளார். இலங்கைத் தமிழர்களைக் காக்க எல்லோரும் அக்கறை காட்டிவருவது உண்மைதான். ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகள் மீது குறை கூறுவதில் இன்பம் கண்டு வருகிறார்கள்.
இலங்கை ராணுவம் தமிழர்களை வீழ்த்துவதற்கு ராஜபட்ச அரசுக்கு உதவும் "அம்பி" யார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா. பாண்டியன் கேள்வியெழுப்பியுள்ளார். ராஜபட்சவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அவருக்கு துணை போயிருப்பவர் பாண்டியன். இப்போது யார் "அம்பி" என்ற உண்மை புரியும் என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி. |