பின்னர் மேயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் கலைஞர் 10.01.2010 அன்று போலியோ சொட்டு மருந்தினை வழங்கி, தமிழகத்தில் 70 இலட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணையாக தொடங்கி வைத்தார்கள். முதல் தவணையாக சென்னையில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 224 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 5 இலட்சம் குழந்தைகளுக்கு மேல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1126 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலியோ நோயை அடியோடு ஒழிக்க வேண்டுமானால் பெற்றோர்கள் தங்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். அவர்களின் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டு மருந்து மையத்திற்குச்சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.
சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவுடன் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது. இதனால் எந்த விதமான தீமையும் இல்லை. ஒரு சில குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் விடுபட்டுப்போனால் கூட இந்த கொடிய போலியோ நோயை ஒழிப்பது சாத்தியம் ஆகாது.
வழக்கமாக தடுப்புபூசி போடும்போது வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து தான் கூடுதல் தவணையாக வழங்கப்படுகிறது. இரண்டாவது தவணையாக போலியோ சொட்டு மருந்து இன்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், சொட்டு மருந்து மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், இரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சொட்டு மருந்து மையங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, சர்க்கஸ், புறநகர் பேருந்து நிலையங்களில் 24 மணி நேரம் நடமாடும் சொட்டு மருந்துமையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம் காரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்ப வர்கள் இந்த நாளில் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. சொட்டு மருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, துணை ஆணையர் ஜோதிநிர்மலா, ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மண்டலக்குழுத்தலைவர் சுரேஷ்பாபு, சுகாதார அலுவலர் டாக்டர் குகானந்தன், கூடுதல் சுகதார அலுவலர் தங்கராஜ், மாவட்ட குடும்ப நல அலுவலர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். |