நக்சலைட் ஆதிக்கம் உள்ள 8 மாநிலங்களில் தேடுதல் வேட்டையை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. இந்நிலையில், மேற்குவங்கம் சில்டா முகாமில் தங்கியிருந்த போலீசார் மீது மாவோ தீவிரவாதிகள் கடந்த மாதம் 15&ம் தேதி நடத்திய தாக்குதலில் 24 போலீசார் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு பின் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கிஷன்ஜி அறிவித்து, தனது செல்போன் நம்பரை மீடியாக்களுக்கு தெரிவித்தார். எந்த நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தங்களது கருத்துக்களை நக்சலைட்கள் தெரிவிக்கலாம் என பேக்ஸ் எண்ணை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டார்.
இந்நிலையில் சில்டா முகாம் தாக்குதலுக்கு நக்சல் தலைவர் கிஷன்ஜியின் நெருங்கிய நண்பர் தீபக்தான் காரணம் என தெரிந்தது. அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இதையடுத்து பேட்டியளித்த கிஷன்ஜி, ‘‘தீபக்கை உடனே விடுவிக்க வேண்டும். சண்டை நிறுத்தம் செய்வது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாவோயிஸ்ட்கள் தயார். பாதுகாப்பு படையினர் தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் 72 மணி நேர சண்டை நிறுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம்’’ என்றார். இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சகம், ‘‘கிஷன்ஜி முதலில் அளித்த வாக்குறுதிக்கு பின் 18 இடங்களில் வன்முறை நடந்துள்ளது. தற்போது சண்டை நிறுத்தம் பற்றி தீவிரமாக பேசுகிறார்கள். நக்சலைட்கள் 72 மணி நேரத்துக்கு வன்முறையை நிறுத்த வேண்டும். அதன் பின் அரசு நிச்சயமாக தாக்குதலை நிறுத்தும்’’ என தெரிவித்தது. அதன்பிறகு எந்த தாக்குதலையும் நக்சலைட்கள் நடத்தவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று போனில் பேட்டியளித்த கிஷன்ஜி கூறியிருப்பதாவது:
அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராவிட்டால், தாக்குதலை தீவிரப்படுத்துவோம். தேவைப்பட்டால் முக்கிய நகரங்களிலும் தாக்குதல் நடத்துவோம். எனது செல்போன் நம்பரை கொடுத்து, கடந்த 25&ம் தேதி மாலை 3 மணி நேரம் காத்திருந்தேன். அரசு தரப்பில் யாரும் பேசவில்லை. மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியபடி 72 மணிநேரம் சண்டை நிறுத்தமும் செய்தோம். ஆனால் அரசு இதை மதிக்கவில்லை. மாறாக, அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி, எங்கள் பிரிவு தலைவர் லால்மோகனை சுட்டுக் கொன்றது.
வன்முறைக்கு நாங்கள்தான் காரணம் என அரசு குற்றம் சாட்டுகிறது. ஆதிவாசிகள் நலனுக்காக அரசு கடந்த 53 ஆண்டுகளாக என்ன செய்தது? இடஒதுக்கீட்டின் கீழ் 90 சதவீத ஆதிவாசிகளால் அரசு வேலை பெறமுடியவில்லை. இதற்கான விண்ணப்பங்கள் வராததால், இந்த ஒதுக்கீடுகள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது. ஜார்கண்ட் முதல்வர் சிபுசோரன், பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதால் எங்கள் பிரச்னையை புரிந்துகொள்வார் என நம்புகிறோம். அவரும் எங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் தாக்குதல் நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு கிஷன்ஜி கூறியுள்ளார்.
பல முக்கிய நகரங்களிலும் தாக்குதல் நடத்தப்போவதாக அரசுக்கு நக்சல் இயக்கத் தலைவர் நேரடியாக மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|