மணிப்பூரில் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா விடுதலை செய்யப்பட்டார். திங்கள்கிழமை இரவு விடுதலையான அவர் தனது உண்ணாவிரப் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்.
மணிப்பூரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு 1958-ம் ஆண்டு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தினால் தீவிரவாதிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். கடந்த 2000-ம் ஆண்டு நவம்பரில் இம்பாலில் அசாம் ரைஃபிள் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தினைத் திரும்பப்பெற கோரியும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா தொடங்கினார்.
போராட்டத்தை கைவிடக் கோரி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். சிறையிலிருந்து விடுதலையான அடுத்த சில நாள்களில் போராட்டத்தினை மீண்டும் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அவர்.
இவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன் ஷர்மிளா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் உடல் நிலை மிகவும் மோசமானதால் சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவமனைக் காவல் அளிக்கப்பட்டது. உண்ணாவிரத போராட்டத்தை அங்கும் தொடர்ந்ததால், உணவுக் குழாய் மூலம் திரவ உணவு அவருக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தண்டனைக் காலம் முடிந்து திங்கள்கிழமை இரவு 7.30 மணி அளவில் ஷர்மிளா விடுதலை செய்யப்பட்டார். உடனே அவர் போரம்பட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஷர்மிளாவின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, அவரது அமைப்பைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள், போரம்பட்டில் கடந்த ஓர் ஆண்டாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். விடுதலையான ஷர்மிளா தனது அமைப்பினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
|